24/6/13

தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11



தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11  
 சென்றப் பதிவில் எவ்வாறு தமிழர்கள் அவர்களைத் தவறாக சத்திரியர்கள் என்றுக் கருதிக் கொண்டு இருக்கலாம் என்று கண்டோம். இப்பொழுது நாம் இங்கே மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. ஒரு நாடார் இனப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கிட்டிய விடயம் தான் அது.

இன்று நாடார்களும் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்தினைக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இங்கே சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் சில காலங்களுக்கு முன்பு வரை நாடார் இன மக்கள் பஞ்சமர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

பள்ளர் பறையர் சாணார் சக்கிலியர் என்று பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்த மக்களுள் சாணார் என்ற மக்கள் தான் இன்று நாடார்கள் என்று அழைக்கப் பெறுபவர்கள். அப்படி இருக்கையில் பஞ்சமர்கள் என்று தாழ்த்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களும் தாங்கள் சத்திரியர்கள் என்றுக் கூறுகின்றனரே? அது எவ்வாறு என்று கேள்வியினை எழுப்பியப் பொழுது அதற்கு விடையாய் அப்பெரியவர் சொன்னது..."விசய நகர ஆட்சியில் தான் நாடார்கள் தாழ்த்தப்பட்டு பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டனர்" என்பதே.

அதாவது விசயநகர படை எடுப்பின் பொழுது இங்கே அரசாண்டுக் கொண்டு இருந்த தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் தான் சாணார்கள் பஞ்சம வரிசையில் இருந்தனர் என்பதே அவர் கூறிய விளக்கத்தின் பொருள் ஆகும்.

சரி...சரியான ஒரு விளக்கமாகத்தான் படுகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால் பஞ்சம வரிசையில் வைக்கப்பட்டு இருந்த அனைவருமே அக்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து இருக்கலாம் தானே....பள்ளர்கள் பறையர்கள் போன்ற தமிழ் மக்களும் விசயநகர அரசின் கீழ் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் தானே...? இதையே அப்பெரியவரிடம் கேட்ட பொழுது அவரால் அதனை ஏற்க முடியவில்லை..."அது எப்படி தம்பி...அவங்க எல்லாம் முன்னாடியே தாழ்த்தப்பட்டவங்க அப்படின்னு சமயங்களில் இருக்கே..." என்றே அவர் கூறினார். சமயங்களில் இருந்தமைக்கு சான்றுகளை அவரால் தர முடியவில்லை இருந்தும் மற்ற மக்களும் விசயநகர ஆட்சியின் காலத்தில் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணத்தினை அவரால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரச்சனையே அதில் தான் இருக்கின்றது.

இன்றைக்கு தங்களை ஆண்ட இனம் என்றுக் கூறிக் கொள்ளும் மக்களுள் பெரும்பான்மையான மக்கள் தங்களின் சாதிப் பெருமையினைப் பேசுவதற்கே அவ்வாறு கூறுகின்றனர். அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் சாதி உயர்ந்த சாதி...அதே சமயம் மற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகள். அவ்வளவே.

ஒருவன் தன்னை சத்திரியன் என்று எப்பொழுது கூறுகின்றானோ அவன் அப்பொழுது தன்னை விட மேலாக பிராமணன் இருக்கின்றான் என்றும் தனக்கு கீழாக சூத்திரன் என்று ஒருவன் இருக்கின்றான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். மேலும் மனிதர்களைப் பிறப்பால் பிரிக்கும் மனு நீதியையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். இந்த நிலைப்பாட்டால் தமிழர்களுக்கோ அல்லது தமிழ் நாட்டுக்கோ யாதொரு நலனும் கிட்டப் போவதில்லை...மாறாக சாதிச் சண்டைகள் வன்முறைகள் நிம்மதி இன்மை போன்றத் தீமைகள் தான் கிட்டப்பெரும்.

இந்த நிலைப்பாடு, சாதி ஏற்றத்தாழ்வு என்றால் என்ன...நமது சமயங்கள் அதைத் தான் கூறுகின்றனவா...தமிழனின் வரலாற்றில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தனவா என்பதனைப் போன்ற விடயங்களை அறியாமல் அறியாமையிலேயே தமிழன் இருக்கின்றனத் தன்மையினால் ஏற்படுகின்ற ஒன்றாகும்.

உதாரணத்திற்கு...இன்று மக்களிடையே சில கேள்விகளை வையுங்கள்...

உலகின் முதல் மொழி என்ன என்றுக் கேட்டால் சமசுகிருதம் என்றுக் கூறுவார்கள்...வேதங்கள் என்ன என்றுக் கேட்டால் அவை ரிக், யசுர்,சாம அதர்வண வேதங்கள் என்றுக் கூறுவார்கள்...இறைவன் மனிதனை எத்தனைப் பிரிவுகளாகப் பிரித்து இருக்கின்றான் என்றுக் கேட்டால் நான்கு...அவை பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்றுக் கூறுவர். இவைகள் சரியானவைகளா இல்லையா என்பதனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது...அவர்களுக்கு அவ்வாறு தான் சொல்லித் தரப் பட்டு இருக்கின்றது...அதனால் அதை அவர்கள் கூறுகின்றனர்.

இதே நிலையில் தான் இன்று தாங்கள் ஆண்ட இனத்தவர்கள்...சத்திரியர்கள்... என்றுக் கூறிக் கொள்ளும் தமிழர்கள் இருக்கின்றனர். நிற்க.

தமிழ் இனம் என்பது ஒரு மாபெரும் இனம்....மிகப்பெரிய வரலாறு...பண்பாடு...நாகரீகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய/விளங்கும் ஒரு இனம் அது. அத்தகைய நாகரீகத்தை வெறும் மன்னர்கள் மட்டுமா கட்டி இருப்பார்கள். இல்லை...!!! பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், வீரர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் போன்ற மேலும் பல சிறந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தமிழ் நாகரீகம். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று ஒன்றும் இல்லாது கிடக்கின்றது. அது கண்ட சிகரங்கள் வெறும் வரலாறாய் உறைந்துக் கிடக்கின்றது. இந்நிலையில் தான் தமிழ் இனத்திற்கு உரிமைக் கொண்டாடும் குரல்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்று பெரும்பாலான சாதிகள், 'நாங்கள் ஆண்ட இனம்' என்றுக் கூறிக் கொண்டு சோழனுக்கும் பாண்டியனுக்கும் உரிமைக் கொண்டாடுகின்றனவேத் தவிர எந்த சாதியும் நாங்கள் அறிஞர்களாக இருந்தவர்கள்...ஆன்மீகச் சான்றோர்களாக இருந்தவர்கள்...என்று உரிமை பாராட்ட பெருமளவில் முன்னே வருவது இல்லை.

ஆண்ட இனத்திற்குத் தான் அத்தனைப் போட்டியும்... !!! ஏன் அரசர்களும் வீரர்களும் மட்டும் சேர்ந்து உருவாக்கிய நாகரீகமா தமிழ் நாகரீகம்? இல்லையே!!! அப்படி இருக்கையில் ஆண்ட இனத்திற்கு மட்டும் போட்டி இருப்பது எதனால் என்றே நாம் கண்டோம் என்றால் விடையாய் வருவது இன்றைய சமூகத்தின் பொது நிலையான எண்ண ஓட்டமே ஆகும்.

ஒருவன் பத்து பேரினை அடித்தான் என்றால் அவன் வீரன். அவன் தான் பெரியவன். அப்படி வீரத்துடன் இருந்தால் தான் கௌரவம்...அது தான் அவன் குலத்திற்கு...சாதிக்கு அழகு...பெருமை. இந்த எண்ண ஓட்டத்தினில் தான் இன்று பெரும்பாலான சாதிகள் ஆண்ட சாதிகள் என்ற பட்டத்திற்கு போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. 'ஆள்வது' என்ற ஒரு விடயத்தினை மாபெரும் பொறுப்பாகப் பார்க்காமல் வெறும் பெருமையாகக் காணும் நிலை மட்டுமே அவர்களிடையே பெருவாரியாக இருக்கின்றது. 'வீரப் பரம்பரைக்குத்' தான் அனைத்துப் போட்டியும் இருக்கின்றவே ஒழிய 'அறிஞர் பரம்பரை'...'ஆன்மீகப் பரம்பரை' போன்றவைக்கு போட்டிகள் பெருவாரியாக இங்கே இருப்பதில்லை. இது ஒரு மிகவும் மோசமான நிலை ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு புலிகளை எடுத்துக் கொள்வோம்...ஈழத்தில் அவர்கள் பல பிரிவுகளைக் கொண்டு பல கடமைகளை செய்து வந்தனர். அவைகள் அனைத்தும் இன்று ஒடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மீண்டும் முன்னேறி வரும் நிலையில்...அவர்களுக்குள்ளேயே 'ஏய் நான் வான்புலி...நான் உயர்ந்தவன்...நீ கடற்புலி...நீ தாழ்ந்தவன்' என்று பிரிவினைகளைக் கொண்டு இருந்தால் உண்மையான எழுச்சி என்பது அங்கே இருக்குமா? இருக்காது தானே. அதைப் போன்று தான் தமிழகத்திலும்...தோற்கடிக்கப்பட்டு இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எழவில்லை என்றால் தமிழ் இனம் இன்று இருக்கும் நிலையிலேயே தான் தொடர்ந்து இருக்கும்.

தமிழர்களின் அரசர்கள் மட்டும் கொல்லப்படவில்லை...ஆன்மீகத் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். தமிழர்களின் அரசுகள் மட்டும் அடிமைப்படுத்தப்படவில்லை அவர்களின் அறிவியலும் சரி ஆன்மீகமும் சரி சேர்ந்தே தான் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் இனம் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அடிமைப்படுத்தப் பட்ட அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற வேண்டும். அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற அனைத்து தமிழ் இனங்களும் ஒன்றிணைய வேண்டும். சாதி ஏற்றத்தாழ்வு என்பது தமிழ் மண்ணுக்கு உரியதல்ல என்றும் நான் வீரன் என்றால் அவன் அறிஞன் என்ற சகோதர நேசமும் தெளிவும் வர வேண்டும்...இத்தெளிவு வரலாற்றினைப் பார்த்தால் மட்டுமே கிட்டும்.

நாடார்கள் என்பவர்கள் சாணார்கள் என்று கண்டோம் அல்லவா. அந்தச் 'சாணார்' என்றச் சொல் 'சான்றோர்' என்றச் சொல்லின் திரிபே ஆகும்.

சான்றோர்--->சான்றார்--->சானார் என்றே மருவி உள்ளது. தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்ற ஒரு கூற்றும் இங்கே கருதத்தக்கது.

திருவள்ளுவர் பறையர் சாதியைச் சார்ந்தவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வள்ளுவ சாதி என்றே ஒரு சாதி இருக்கின்றது...அதுவும் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கின்றது. சைவ கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்த நாயனார் பறையர் இனத்தைச் சார்ந்தவர் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் வரலாறு.

இதனைப் போன்று ஒவ்வொரு தமிழ் இனத்திற்கும் மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது...அது மறைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்கள் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அவ்வரலாற்றினை நாம் ஆய்வு செய்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்று எவருமே தமிழகத்தில், தமிழ் கலாச்சாரத்தில் கிடையாது. ஏன் பிறப்பின் அடிப்படையில் பிரிவுகளே தமிழகத்தில் கிடையாது...தொழில் அடிப்படையான பிரிவுகள் தான் தமிழர்களின் பிரிவுகள். இதனை ஆய்வுகள் நிச்சயம் உறுதி செய்யும்.

இதனை உணராது நான் ஆண்ட சாதி அவன் தாழ்ந்த சாதி என்று தமிழர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டை இட்டுக் கொண்டு இருந்தனர் என்றால் தொடர்ந்து அடிமையாகவே நமக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்து விட வேண்டியது தான்....உண்மையிலேயே தமிழ் இனத்தினைக் கட்டி எழுப்பிய மக்கள் நம்மை அப்பொழுது நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்



 வழிப்போக்கனது உலக ம் vazhipokkanpayanangal.blogspot.in   

கருத்துகள் இல்லை: